சைவ சமய 63 நாயன்மார்களில், கலிய நாயனார் என்பவர் வணிகர் குலத்தைச் சார்ந்தவர், இவர் சைவ சமயத்தவர்களால் பெரிதும் மதிக்கப்படும் அறுபத்து மூன்று நாயன்மார்களில் 18வது நாயனார் ஆவார்.
தடமதில்சூ ழொற்றியூர் நகருள் வாழுஞ் சக்கரப்பா டியர்குலமெய்த தவமா யுள்ளார் படர்புகழார் கலியனார் நலியுங் கூற்றைப் பாய்ந்தவர்க்கு விளக்கெரிக்கும் பரிவான் மற்றோ ருடலிலராய்ச் செக்குழல்வார்க் கதுவு நேரா துயர்மனைவி யைக்கொள்வா ருளரு மின்றி மிடறுதிர மகனிறைய வரிய நாதன் வியன்கைகொடு பிடிப்பவருண் மேவி னாரே.
சென்னையில் உள்ள திருவெற்றியூரிலே செக்கார் (வணிகம்) என்னும் குலத்திலே பிறந்தவர் கலிய நாயனார். இவருடைய காலம் 8-ம் நூற்றாண்டுக்கு முந்தையதாகும். அப்போது செக்கு தொழிலே இவரது பிரதான தொழிலாக இருந்தது. நல்ல செல்வந்தராய் இருந்த இவர் சிவனின் மீது பக்தி கொண்டார். அதன் காரணமாக திருவெற்றியூர்த் திருக்கோயிலில் உள்ளும் புறமும் ஆயிர கணக்கில் விளக்கேற்றும் சிவ தொண்டினை இவர் செய்து வந்தார். இவரின் பக்தியை சோதிக்க நினைத்த சிவபெருமான் இவரது செல்வதை கரைக்க தன்னுடைய திருவிளையாடலை அரங்கேற்றினார்.
ஒரு கட்டத்தில் இவரது செல்வங்கள் யாவும் கரைந்து போனது. ஆனாலும் சிவனுக்கு விளக்கேற்றும் தொண்டினை இவர் விடுவதாக இல்லை. தினமும் கூலிக்கு வேலை செய்து அதன் மூலம் வரும் வருவாய் கொண்டு திருவிளக்கேற்றி ஆனந்தம் கொண்டார்.
ஒரு கட்டத்தில் தன்னுடைய சொத்துக்கள் யாவையும் விற்றுவிட்டார், இப்போது விற்பதற்கு ஏதும் இல்லை, விளக்கேற்ற எண்ணெய் வாங்கவும் பணம் இல்லை. இதனால் தவித்து போன அவர், தன்னுடைய மனைவியை அழைத்துக் கொண்டு தான் விளக்கேற்றும் படம்பக்கநாதர் திருக்கோவிலிற்கு சென்றார். அங்கு இறைவனை மனதார வணிங்கிவிட்டு, இறைவா நான் உனக்காக செய்யும் இந்த விளக்கேற்றும் திருப்பணி நின்றுவிட்டால் நான் என் உயிரையே மாய்த்துக்கொள்ளவும் தயாராக இருக்கிறேன் என்று கூறினார்.
இவ்வடியேன் ஏற்றும் அகல் விளக்குகளில் எண்ணெய் குறைந்து விளக்குகள் நில்லுமாயின் நான் என் ரத்தத்தை கொண்டு விளக்கேற்றவும் தயங்க மாட்டேன் என்று மகிழ்ச்சியோடு சொன்னார். சொன்னதோடு நின்று விடாமல் அதை மெய்ப்பிக்கும் முயற்சியிலும் இறங்கினார். நீண்டதொரு அரிவாளை எடுத்து அதன் மூலம் தன் கழுத்தை அறுத்து உதிரத்தை விளக்கில் கொட்ட முயற்சித்தார். அப்போது அங்கு எழுந்தருளிய சிவபெருமான் அவரின் கரத்தை பிடித்து தடுத்தாட் கொண்டார்.
கோவிலில் இருந்த விளக்குகள் அனைத்திலும் எண்ணெய் நிரம்பி, விளக்குகள் பிரகாசமாக எரிய துவங்கின, கோவில் முழுக்க சிவபெருமானின் பேரொளி படர்ந்தது, சிவனை கண்டதும் தன் மனைவியோடு சேர்ந்து இரு கரங்களையும் தன் தலையின் மீது குவித்து சிவபெருமானை வணங்கினார் கலிய நாயனார். சிவபெருமான் அவருக்கு பேரின்ப பெருவாழ்வு அளித்தார். அதோடு இறுதியில் தன் திருவடியில் சேர்த்து சிறப்புற்றிருக்கும் அருளையும் வழங்கினார் என்கிறது அவரது வரலாறு.
சிவனிடம் உண்மையான பக்தியோடு இருப்பவரை எம்பெருமான் நிச்சயம் காத்தருள்வார் என்பதற்கு இவர் ஒரு மிகப்பெரிய சாட்சி. அதோடு சிவனை வணங்குவோருக்கு பற்பல இன்னல்கள் எல்லாம் வரத்தான் செய்யும், அதை எல்லாம் கடந்து ஈசனை மனதார வணங்கி வந்தால் தான் அவனுடைய பேரருளை நாம் பெறமுடியும் என்பதற்கும் இவரே சாட்சி.
தடமதில்சூ ழொற்றியூர் நகருள் வாழுஞ் சக்கரப்பா டியர்குலமெய்த தவமா யுள்ளார் படர்புகழார் கலியனார் க்கடியேன் - திருத்தைண்டை தொகை.
ஓம் நமசிவாயம் 
திருச்சிற்றம்பலம் 
நற்றுணையாவது நமச்சிவாயவே 

நல்ல பயனுள்ள தகவல்களை அனைவருக்கும் பகிர்வோமே 



Comments
Post a Comment