விளக்கம்: எங்குத் திரும்பிப் பார்த்தாலும் எல்லாம் இறைவனுடைய வடிவம். ஆகையால் நாலா பக்கங்களிலும் பகவானை வணங்குவதே பொருத்தமானதாகும். பகவான் அளவற்ற வல்லமையை உடையவர். தனது எல்லையற்ற வல்லமையை எண்ணற்ற விதங்களில் அவர் செயல்படுத்துகிறார். இந்தப் பிரபஞ்ச நடைமுறையே அதற்குச் சான்று. எனவே அவர் அளவற்ற பராக்கிரமத்தை. உடையவர்! எனப்படுகிறார்.
பகவான் என்று கூறினால், இந்தப் பிரபஞ்சத்திலுள்ள உயிரினங்கள் அனைத்துமே அவரிடத்தே அடங்கப்பெற்றுள்ளன. அவரைப் போற்றினால் எல்லாமும் போற்றப்படுகின்றன; எல்லாவற்றையும் போற்றினால் அதில் பகவானும் போற்றப்படுகிறார்! என்றாகிறது.
ஏ யாதவா! , ஏ கூட்டாளி! என்று பணிவின்றி எது சொல்லப்பட்டதோ, அச்சுதா! விளையாடிய பொழுதும், படுத்திருந்தபொழுதும், அமர்ந்திருந்தபொழுதும், உணவருந்துகையிலும், தனித்தோ, பிறர் பார்வையிலோ இருந்தபொழுதும், ஏளனமாக எங்ஙனம் அவமதிக்கப்பட்டீரோ, அதையெல்லாம், அளப்பரியோய்! மன்னித்தருள்க".
விளக்கம்: மிக *முக்கியமான சுலோகம் இது. இதுவரைக் கிருஷ்ணரைத் தனது தாய்மாமனின் மகனாகவும், தனது சமவயதுள்ள உற்ற தோழனாகவுமே அர்ஜுனன் இதுவரைக் கண்டு வந்திருக்கிறான். தனது ஆருயிர் தோழன், மைத்துனன் என்றெல்லாம் விளையாட்டுத்தனமாகவும், கேலிப் பேச்சுப் பேசியும் நடந்துக்கொண்டதை எல்லாம் இப்பொழுது நினைத்து நடுங்குகிறான் விஜயன்.
பகவானைப் பற்றிய மெய்யறிவு வந்ததும், அர்ஜுனனின் மனநிலையே அடியோடு மாறிவிடுகிறது. சர்வ வல்லமையுடைய பரம்பொருளான ஶ்ரீகிருஷ்ணரை இதுவரை விளையாட்டுத் தோழனாக மட்டுமே பாவித்து, நடந்துக் கொண்டோமே! என்று வருந்தி மன்னிப்புக் கேட்கிறான் பார்த்தன்.
கிருஷ்ண பகவானாகத் தோன்றிய தோற்றம் ஒன்று மட்டுமல்ல; இவ்வுலகிலுள்ள தோற்றங்கள் யாவும் ஈசுவரனுடையவைகளே. அவைகளைப் பாராட்டுமளவு நமக்கு நல்லறிவு வருகிறது. நம் அறிவு தெளிந்தது என்றாலும், வணக்கத்தோடு கூடிய நெருக்கத்தை இறைவனிடமும், இறைவனது படைப்புகளிடமும் வைக்கக் கற்றுக்கொள்ள வேண்டும்! இதுவே தெளிவுபட்ட மனமாற்றமாகிறது. 

Comments
Post a Comment